தேரையே
எங்குச் சென்றாய்?
by S. Vijayalakshmi
தேரைக் குட்டி, தேரைக் குட்டி
என்னை விட்டு எங்குச் சென்றாய்?
உன்னைப்பற்றி அன்று எழுதினேன்
அன்று முதல் உன்னைக் காணவில்லை
தினம் காலை உன்னைக் குளிக்கும் அறையில்
மனம் குளிர வணக்கம் சொன்னேன்
உன்னை நான் என்ன செய்தேன்?
ஏன் ஓடி ஒளிந்துக் கொள்கிறாய்?
என்னைக் கண்டு பயமா அல்லது
உன்னைப்பற்றி எழுதியது குற்றமா?
உன்னைப் பற்றி எழுதிக் கொள்
என்னைப் பற்றி வேண்டாமென்று
எங்கோ ஓடி மறைந்து விட்டாய்
மனிதனுக்குத்தான் தன்னைப்பற்றி
மணிகணக்காக பேசும் பெருமை
நான் எங்கோ மறைந்திருக்கிறேன்
என்னை ஏன் வம்புக்கிழுக்கிறாய்?
உன்னை நான் கேட்டேனா?
என்னைப்பற்றி எழுதச் சொல்லி?
உனக்குப் பொழுது போகவில்லையானால்
நானா அகப்பட்டேன் தலையை உருட்ட?
எங்கோ வாழ்கிறேன் படைத்தவனை நம்பி
உங்களுக்குதான் எதுவுமேயில்லை
தங்களைப்பற்றிய சிந்தனையைத் தவிர
என்னை விடு பிழைத்துப் போகிறேன்
என்னைப் பற்றி எழுதினால்
உன்னை சும்மா விடமாட்டேன்